skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Friday, August 31, 2012

சில வேளைகள்



இரக்கமற்ற பொழுதுகள் 
எங்கேயும் நிறைந்து ,
சுவாசிக்க இயலா அடர்வில் 
அழுத்துகின்றன ....

நேற்று , இன்று ,நாளை 
என்ற கால அட்டவணைகள் 
பிரித்து எழுதவோ 
எதிர்த்து வாதிடவோ அவை 
தயங்குவதில்லை ....

இருள் சூழ் வேளைகளிலும் 
ஒற்றையாய் பாய்மரம் 
விரித்து தனித்தே 
சென்று கொண்டு இருந்தது 
எண்ணப்படகு........

மையப்  புள்ளியாய் 
புரிதல்கள் விடுத்து 
சுற்றிலும் அடங்கலற்ற 
விரிதல்கள் ,விவாதங்களும் 
அவைகளுள் அதீதம் 

தனித்து போன 
அப்பொழுதுகள் உட்சொருகி 
ஓர் சுழல் வட்டமிட்டு 
சுவர்கோழியின் ரீங்கராத்தோடு  
கூச்சல் இட ......துவங்குகிறது 
மற்றுமோர் 
இரக்கமற்ற பொழுதின் 
அத்தியாயம் ...
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5895
Posted by shammi's blog at 10:19 PM 0 comments
Labels: உயிரோசை

Sunday, August 19, 2012

வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் ...

இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன 
அவைகளின்,
 விரல் பிடித்தே வெளிச்சங்கள்
கதிர்களின் கிரகணங்கள் படர 
மீண்டு வரா தொலைவில் 
புதைந்தன கனவுகளின் வாத்சல்யம் 

நிழலின் படங்கள் ஒருபோதும் 
கலைவதோ அல்ல கலைக்க படுவதோ  இல்லை ...
எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு 
நிகழ்விலும் தலைப்படும்
அவை ...
தர்கிக்கும்  ..

உருகி நிற்கும் தருணங்கள் 
உறையும் நிகழ்வுகள் 
இவைகள்  கிரகண பொழுதில்  
ஒளிகள் அற்று இன்னும் சுற்றி 
 சூர்யனை தகர்க்கும் ...
துகள்கள் சிதறி வளியின்
அடர்வு அதிகப்படும் 

புரியாத காலங்களில்
வாத்சல்யம் அற்று மீண்டும் 
இருளை கை பிடித்து அழைத்து 
செல்கின்றன கற்றையாய் 
நின்ற கிரகங்கள் ...



http://puthu.thinnai.com/?p=14120
Posted by shammi's blog at 6:34 PM 1 comments
Labels: திண்ணை

Tuesday, June 5, 2012

மெலினாவின் கனவொன்றில் ...


அவளின் கைகள் நீண்டு 
வானம் தொட்டே  பூக்கள்
பறிக்கின்றன ....

அவைகளை  மாலையாக்கி   
ஒளியின்  ஊடு உருவலில் 
நீண்டு கொண்டே போகின்றன
 பொம்மை கல்யாணத்திற்கான 
மன மாலைகள் .....

ஓர் மேக
உருவம் செய்து 
அதை யானை எனக்கொண்டு 
இம்மாலைகளை சுமந்து 
வரச்சொல்கிறாள் மெலினா ...

சுமந்து வரப்பெற்ற 
அம்மாலையில் நட்சத்திரங்கள் 
வெப்பம் தாளாமல்
ஒவ்வொன்றாய் உதிர 
மதம் பிடித்து ஓடியது 
 அம்மேகக்  களிறு ....

" விலுக்கென " அசைகிறாள் 
பத்தே வயதான மெலினா ...
அவள் கரங்களின் நாளங்கள்
வழியே 
கீமோ வின் திரவங்கள் 
செலுத்தப்படுகின்றன .....
அசங்கலுற்ற அவள் முகம் 
அம்மதம் பிடித்த யானையின் 
 மேல் கொண்ட 
அச்சம் ஒத்தே  இருந்தது
http://www.vallinam.com.my/issue42/poem4.html
Posted by shammi's blog at 9:21 AM 2 comments
Labels: வல்லினம்

Sunday, May 27, 2012

யாதுமாகி …


நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல்
பேசிக்கொள்கிறார்கள் ..
நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே
அவை சென்று விட்டதாகவே
நினைத்து கொள்கிறார்கள் …
கண்ணோரச் சுருக்கங்களையும்
மோவாயின் தளர்ந்த தசைகளையும்
நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில்
பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்
குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே
தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து
இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில்
சமைத்து பரிமாறுகிறார்கள் ..
தோல்விகளை திரையிட்டு மறைத்து
வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் ..
புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக
பறைசாட்டுவர் …
சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும்
இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் …
“தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை
சுழலவிடுவர் …
சற்றே அயரும் நேரத்தில்
நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர்
சிலவரிகளில் நீங்கள்  வாசிக்கும் பொருட்டு
அவர்கள் உங்கள் அருகிலோ,
அல்லது நீங்களாகவோ
அல்லது நானாகவோ இருக்கக்கூடும் ...

http://puthu.thinnai.com/?p=11669
Posted by shammi's blog at 8:44 PM 1 comments
Labels: திண்ணை

Monday, May 14, 2012

இறக்கை முனையில்

எழுத்துகள் ஒன்றன் பின் ஒன்றாய் 
சிதறிக் கிடந்தன...
அறை முழுதும்... அதில் ஒன்று 
எங்கோ தனை ஒளித்துக்கொண்டது
வார்த்தைகள் அமைக்கும்பொருட்டு
அவ்வொரு எழுத்து நிரந்தரத் தேவையாய்
நின்றுவிட்டது...

சந்து பொந்துகளின் இடுக்குகளில் 
சிக்கி பின் சாய்வாய் 
காற்றாடியின் நடுவே ஒளிந்து கொள்கிறது 
மெல்ல அதன் முனை வாலாய் நீண்டு 
தொங்க ஆரம்பித்தது 

ஒரு கட்டத்தில் 
இறக்கைகள் சுழல 
நின்று இருந்த அந்த எழுத்து இப்போது 
அகங்காரம் கொண்டு 
வட்டமடித்து அறைமுழுவதும் 
கூச்சல் எழுப்ப ஆரம்பிக்கிறது...
http://www.vallinam.com.my/issue41/poem5.html

Posted by shammi's blog at 4:59 AM 2 comments
Labels: வல்லினம்

Tuesday, May 1, 2012

மரப்பாச்சி ..


கோகிக்கு காலம்பர எழுந்ததுலர்ந்து வேலை சரியாக இருந்துண்டு இருந்தது ...அவள் தனக்கு தானே பேசிண்டு இருந்தாள்....இனி கோகியின் பார்வையில் .....

'ஆத்துல கொலு ..வேலை அம்பாரமான்ன குமிஞ்சுன்னா  கிடக்கு ..காலேஜ் போன அம்பி இன்னும் வந்தபாடில்லை ...அவாஅவா ஒரு வேலை செய்யப்படதோ ? செய்ய மாட்டா ..நேக்கு நன்னா தெரியும் இவாள பத்தி ....மாங்கு மாங்குன்னு செய்யணும்னு பகவான் என்னை படச்சுட்டன் '... 

மாமி எங்கேர்ந்தோ  கத்தினாள்"  கோகி ! அடி கோகி ! இங்க சித்த வாயேண்டி ...ஒரு நாழியாறது காபி கேட்டு ..."
இந்த ஆம்ல என்னைவிட்டா நாதி கிடையாது இந்த பரண் அடுக்க , அடுக்களை வேலை செய்ய ...

"தோ வந்துட்டேன் மாமி  ..சித்த இருங்கோ கை வேலைய முடிச்சுட்டு காப்பி தரேன் ..."

அப்படியே  எடுத்த பொம்மையை வெச்சுட்டு அடுக்களை போய் டிகாக்ஷன் இறக்கி ..பால் காய்ச்சி ..ஸ்ட்ராங்கா ஒரு மிடறு முழுங்கினேன் ...

மீண்டும் மாமி அழைத்தாள் "டீ....என்ன பண்றாய் ...? இன்னுமா காபி இறங்கல ?"

"வந்துட்டேன் தோ" ...ஆவி பறக்க நீட்டினேன் ...

"வர வர கிழம் அப்டின்ற எண்ணம் நோக்கு வந்துடுத்து.... டீ..."

இல்லை மா ...கொலு பொம்மையை பார்த்துண்டு இருந்துட்டேன் அது தன் நீங்க கூப்பிட்டதும் உடனே வரமுடியல...என சமாதானம் செய்தேன் 

"ஹ்ம்ம் ....என்ன தான்  சொல்லு கோகி ! நோக்கு முன்னபோல என்மேல் ப்ரியம் இல்லடி ...முன்ன எள்ளுனு சொல்லரச்சே எண்ணையாய் நிற்பாய் ..இப்போ அசமஞ்சம் கொஞ்சம் வந்துடுத்து..."

இல்ல மா அப்படி சொல்லாதேங்கோ ...நீங்க தான் நேக்கு எத்தனை செஞ்சு இருக்கேள் ....மாமியா இருந்தாலும் நேக்கு ஒரு தாய் ஸ்தானம் இல்லையா நீங்கோ .... மனசுல ஏதோ எண்ணம் ஓடினாலும் காமிக்க முடிய்மோ? இது வாக்கப்பட்ட இடம்மாச்சோல்லியோ ?

"சரி டீ போய் வேலைய பாரு...அப்புறம் நேரம் ஆய்டும் ...அம்பி வரப்போல அடை தட்டி அவியல் பண்ணிடு ..."

கிட்டான் வந்துண்டு இருந்தான் ....
மாமியிடம் "சரி மா போய் அந்த பரண்ல இறுக்க மாம்பெட்டிய இறக்கிறேன் ..கிட்டான் வந்து இருக்கான் ..அவன சித்த நாழி ஒத்தாசை பன்னசொல்லுங்கோ ...அப்போ தான் பரண்ல இருந்து மரப்பாச்சியை எடுக்க முடியும் ...
"டேய் கிட்டான் சித்த பரண் மேல ஏறி அந்த சின்ன பெட்டியே எடேன் டா ..."

"சேரி மாமி ...தோ வரேன் ...
இதுதானுங்களா நல்ல பார்த்து சொல்லுங்க அப்புறம் இன்னொரு தபா ஏற சொல்லாதீங்க ...எனக்கு வேலை கிடக்கு "

அதே தான் டா ...ஹ்ம்ம் ..மெல்ல ...

இனி நீ போய் வேலைய பாரு ...

அந்த பெட்டில இருந்து ஓர் நெடி பரவித்து...கொஞ்சம் பழசு கலந்த வாசம் ...ஸ்மரணை எங்கோ இழுத்துண்டு போச்சு ..பெட்டில ...ஒரு பொம்மை கரெல்னு கருப்ப ஈஷிண்டு ...ஆன பரம லக்ஷணமா இருந்துத்து, அதை கைல எடுத்தேனோ, இல்லையோ ...அது பேச ஆரம்பிச்சுடுத்து...சிரிக்காதே ள் ..உண்மையான்ன சொல்றேன் ...

" டீ கோகி.., என்ன தெரியறதா? ..

இல்லையே ...நேக்கு தெரியலை ..ஆன உன் குரல் எங்கோ கேட்டாபல இருக்கு ...

"இருக்கும் டீ ...நீ சின்னவளா இருக்கச்சே எப்போவும் ஓர் மரப்பாச்சி பொம்மையோட ஈஷேண்டே இருப்பாய் இப்போ பெரியவளானதும் கொலுக்கு மட்டும் என்னை எடுத்து சீராட்ட நினைக்கிறாய் "

ஆமாம் இப்போ நினைவு வந்துத்து ...சின்னவளா இருக்கச்சே வசந்திக்கும் நேக்கும் எப்போவும் போட்டியா இருக்கும் உன்னை வெச்சுக்கரதுல ...எப்போவும் நான் தன் அவளாண்ட சண்டைபோட்டு வாங்கிண்டுடுவேன் , அப்போ எவ்ளோ பிடிவாதமா இருப்பேன் ..இப்போ நான் தான் இந்த ஆம் லையே பொறுமைக் காரி தெரியுமோ ?

"ஹ்ம்ம் அப்படி தான் தெரியறாய் ...ஆன எப்போவும் செய்றத செஞ்சுட்டு நான் நான்னு பிலாக்கணம் பாடறாய் அது தான் கொஞ்சம் கூட நன்னால்லை "

நோக்கு என்ன சொல்லிடறாய் நான் படர பாடு இருக்கே ...

"இதை இதை தான் சொல்லறேன் ...எப்படியும் செய்ய போறாய் , அப்புறம் ஏன் இப்படி? ஒரு முறை எனை கிழே விட்டுட்டாய்அப்போ என் கை உடைஞ்சு போச்சு ..அதுக்காக நீ பண்ணின ஆர்ப்பாட்டம் ...பகவானுக்கு தான் தெரியும் ...என் கைய உடனே வைக்கனும்னு அழுது ஆகித்தியம் செய்தாய் ..இப்போ அது இல்லைனாலும் நீ என்ன மாறி இருக்காய் தெரியுமோ ? உன்னை பத்தி நெனைக்கறது இல்லைன்னு , எல்லார் மேலவும் குற்றம் பார்க்கிறாய் ...நிஜமாய் நீ ஒரு மிடறு காபி விழுங்கும் போதே மாமிக்கு காபி கொடுத்து இருக்கபடதா ?அவ கத்தற மட்டும் ஏன் விட்டாய் ?"

உள்ளுக்குள் லேசாய் ஓர் முள் நிரடித்து இருக்குமோ ? நாம அசட்டை பண்ண ஆரம்பிக்கிறோமோ?..நேத்தும் இதே தான் பண்ணினேன் ...சாப்பாடு போட நாழிப்பண்ணினேன் ...பாவம் மாமி அவளால முடியலை அது தான் ஒத்தாசை கேட்டாள் ...பண்ணறத பிலாகனத்தோடு ஏன் பண்ணனும் ...மாமி எத்தனை செய்து இறுக்க சிரிச்ச மொகமா...

" கோகி! இப்போ புரியறதா டீ  ...என்ன சொலறேன்னுட்டு ..."

"ஹ்ம்ம் "....

"அடைக்கு ஊரப்போடரச்சே கொஞ்சம் போல சட்னி செய் ..அம்பிக்கு ரொம்ப இஷ்டம் " மாமி குரல் கொடுத்தாள் ..

விழிப்பு தட்ட எழுந்தேன் , மறுபடியும் செக்கு மாடு ஆட்டமா ,வேலை சொல்லராலே,என்ன செய்ய ,சித்த நேரம் நான் சும்மா இருக்கபடாதே  மாமிக்கு ....

கையில் மரப்பாச்சி சன்ன சிரிப்பு சிரித்தது ....***


Posted by shammi's blog at 6:08 AM 2 comments
Labels: அதீதம்

Sunday, February 19, 2012

யாரோவாகவே இருந்து இருக்கிறாய்



உள்ளில் புதைந்து இருக்கும் உனைக்
கடைந்தேற்றல் இயலாததாகவே
இருந்து வருகிறது ..காரணியாய்
வினவுகள் மட்டுமே ...
உதிர்வித்த நினைவுகளின்
இழைகள் பிடித்து
வலை பின்னுகிறாய்
அம்மெல்லிய ஞாபகங்களை
அதீதம் கோர்த்தே இறுக்குகிறாய் ....
ஸ்படிக பள்ளத்தாக்குகளில் ஆழ்ந்து இறங்கி
பழம் பாசி படர்ந்த மூலைகளில்
கூர்மமாய் அவைகளைக் கொத்தி
புசிக்க ஆரம்பித்தாய் ...
கருமை படர்ந்த வெளிகளில்
உனைக் கரைத்து எடுத்துச் செல்கையில்
வெளிச்சம் தேடி நடந்த கால்கள்
பின்னோடு இருளையும்
இழுத்துச் செல்ல தலைப்பட்டன
இருக்கட்டும் இனி
இதுவே கடைசியென....
Posted by shammi's blog at 3:30 AM 2 comments
Labels: உயிரோசை

Thursday, January 12, 2012

ஓர் பிறப்பும் இறப்பும்


எங்காகிலும் தட்டுபடுகிறதோ
அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ?
நீள் கோடுகளும் அங்காங்கே
புள்ளிகளுமாய்..
அழகின் ஒரு பகுதியை
குத்தகைக்கு எடுத்த பிம்பமென
தாவி தாவிப் பறக்கும் அது …?

மனம் கவர்ந்திழுத்த அதன்
நினைவுகளில்
அழுகிப்போன இதயங்களின்
சுவடுகள் ஏதும் பதிப்பிக்க
அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய்      இல்லை …

மெல்லிய இறக்கைகள் விரித்து
பறக்கும் அவைகளில்
கனந்து போன துன்பங்கள்
கரைந்து போக …
மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும்
கரைக்க ….ஏதோ ஓர் பிறப்பின்
ஆரம்பமும் …முடிவும் …
ஒருங்கே பிரசவித்தது ….
Posted by shammi's blog at 10:58 AM 0 comments
Labels: திண்ணை

...மீண்டும் ....



எண்ணற்ற நட்சத்திரக்
கோள்களில் தேடி த் தேடி
களைத்துபோய் இருக்கையில்
எங்கோ ஒரு மூலையின் ஓரமாய்
கண்சிமிட்டி அழைக்கிறாய்
இறகுகளின் சுமைகளை
அப்போது தான்
உதிர்த்து பரவலாய்
வைத்திருந்தேன் …
அவைகளை எடுத்து பிணைத்து
கொண்டு இருக்கையில் …
சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது
ஒரு காலைப்பொழுது ….
இரவிற்கான காத்திருத்தல்
தொடங்குகிறது …..
Posted by shammi's blog at 10:56 AM 1 comments
Labels: திண்ணை

Thursday, December 22, 2011

எம்பேர் தேம்மொழி!


எம் பேர் தேம்மொழி. எல்லாரும் சனியனே, நாயே.. இப்படி கூப்பிட்டு என்னோட நெச பேர் மறந்தே போச்சுங்க. அத விடுங்க.. எங்கதைய கேக்கறீங்களா? யார் கிட்டயாவது சொன்னாதான் மனசு நல்லா இருக்கும், எனக்கும் உதவி பண்ணுவீங்க.
என் பேர்தான் மொதல்லையே சொல்லிட்டேன்.. இன்னொரு தபா சொல்லாட்ட என்ன? நா தஞ்சாவூர்க்காரி.. எங்க அப்பா அம்மா ஒரு தேட்டர் முன்னாடி பஜ்ஜி போண்டா கடை வைச்சு யாவாரம் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ நான் ஸ்கூலுக்கு எல்லாம் போவலங்க. அத ஏன்னு கேக்காதீங்க.. அப்புறம் அந்த கதைய தனியா சொல்லவேண்டி வரும். இப்போதைக்கு ஏன் நான் ஊருக்கு போகணும்ன்னு சொல்றேன். எதுக்கு.. ஏன் ஒருத்தரும் கொண்டு போய் விடமாட்றாங்க இது தான் எனக்கு தெரிய மாட்டேங்குது.
சரி, மொதல்ல நான் ஊரைவிட்டு எப்படி வந்தேன்.. எனக்கு தான் படிப்பு வரலையே. அதுங்காட்டி தேட்டர் வாசலே கதின்னு கிடந்தா.. மனசு படிப்புக்கா போவும். இப்படியே நாள் போச்சு.. எப்போ பாரு அந்த சினிமால கதாநாயகி எப்படி வராளோ அதே மாதரி பொட்டு, மை ன்னு ஜம்னு ஒரு ஸ்டைல் பண்ணிக்குவேன். அதுக்காக நான் பெரிய அழகுன்னு நெனைச்சு ஏமாந்து போவாதீங்க.. எங்க அம்மா கூட திட்டும் விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலமான்னு.
எத்தனையோ தபா சொலிச்சு வேண்டாம் டீ.. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப்போகுது அப்படின்னு.. கேட்டேனா.. இல்லையே. திங்க, தூங்க, சினிமா பாக்க.. எதாவது ஒரு ஹீரோ வந்து என்கூட டூயட் பாடுவான்ன்னு மனசு நம்புச்சு. அப்போ பார்த்து அந்த சலீம் கடை டீ போடற பாஷா பார்த்து சிரிச்சான்.
அவனும் கொஞ்சம் கருப்பு தான். நம்ம விஜயகாந்த், ரஜினிகாந்து மாதிரின்னு எனக்கும் பிடிச்சுபோச்சு. நானும் சிரிச்சேன். கொஞ்ச நாளா நானும் அவனும் சுத்தாத இடம் இல்லை. எங்க அம்மா வெஞ்சு, சூடு எல்லாம் போட்டுது. பாஷா சொன்னான் 'நீ என் கூட வந்துடு எங்க வாப்பா கிட்ட சொல்லி நிக்கா பண்ணிகறேன்'ன்னு சொன்னான். செரின்னு அவன் கூட போனேன்.
அவனும் சொன்னாப்பல எம் பேர நிஷா பேகம் ன்னு மாத்தி நிக்கா செய்துகிட்டான். அவங்க வீட்ல கொஞ்ச நாள் எல்லாரும் பேசல.அப்புறம் நல்ல பேசினாங்க. ரெண்டு குழந்தைங்க கூட பிறந்துச்சு. நல்லாதான் போச்சு வாழ்க்கை பாஷாவோட தம்பி தீனுக்கு கண்ணாலம் முடியறவர.
அவனுக்கு பணக்கார இடத்துல பரியம் போட்டாங்க, சீர் செனத்தியோட. வந்தவ கொஞ்சம் கடுசா இருந்தா. கொஞ்சம் கொஞ்சமா பிரச்சன ஆரம்பிச்சுது. எங்கயும் போகவும் முடியல. எனக்கு தான் தேட்டர் விட்டா வீடு, அதை தவிர பஸ்ல கூட போகத் தெரியாதே.. குழந்தைங்க பேரு சொல்லலல பாரு.. பையன் பேரு ஜாபர், பொண்ணு பேரு ஆசியா பேகம். ரெண்டுக்கும் ரெண்டு, மூணு வயசாச்சு.
தினம் வேலை அதிகம். மெல்ல செஞ்சா கொழுந்தியா சூடு போடுவா. அதுல வேற கால் எல்லாம் காயம். பாஷா முன்ன மாதிரி இல்லை.. அவனும் தினம் அதிகம் பேச்சு கேட்டு மாறிட்டான்.. பாவம் என்ன செய்வான்? அப்பவும் ஒரு தபா சினிமாக்கு கூட்டிகினு போனான். அதுக்கும் சேர்த்து அவங்க வாப்பா கிட்ட திட்டு வாங்கினான். வர வர எங்கையாவது அடி, சூடு வாங்காத இடம் இருந்தா போயிறலாம்-ன்னு நெனைப்பு வந்துச்சு.
அப்போ பார்த்து பக்கத்து ஸ்டோர்'க்கு பரிமளா அக்கா வந்துச்சு. அது ரொம்ப நல்லா பேசும். "ஏண்டி இப்படி கஷ்டப்படற.. பேசாம இதுக்கு எங்கயாச்சும் போயிறலாம்" அப்படினு அறுதல் சொல்லும். அது வீட்ல டிவி, துணி துவைக்கற மிசின் எல்லாம் இருந்துச்சு. பாக்க ஏக்கமா இருக்கும். நிறைய டிசின்ல புடவை வெச்சு இருக்கும், எனக்கு கூட ரெண்டு குடுத்துச்சு. எனக்கு அது மேல ஒரு பிரியம் வந்துச்சு.
தினம் அதுக்௯ட சித்த நேரம் பேசினா தான் நல்ல இருக்கும். நான் சொல்லறதை எல்லாம் கேக்கும்.
அப்புறம் ஒரு நாள் சொல்லிச்சு "டீ நான் ஒரு இடத்துக்கு கூட்டி போறேன்.. அங்கே வீட்டு வேலை தான். ஒரு வருஷம் வேலை செய்ஞ்சா போதும்.. பணம் நிறைய தருவாங்க. அப்புறம் இங்க வந்தா, திட்டு இல்லாம இருக்கலாம்ல"
எனக்கும் அது தான் செரின்னு தோன்னுச்சு, ஒரு விடிக்கலாம்பர கிளம்பிட்டேன். யார்கிட்டவும் சொல்லவேண்டாம் அப்படினு பரிமளா அக்கா சொல்லிச்சு. செரின்னு, அது கூட கிளம்பிட்டேன். பஸ்ல நிம்மதியா இருந்துச்சு யார் கிட்டவும் பேச்சு கேக்க வேண்டாம்னு, அப்படியே தூங்கிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது திருப்பூர் வந்துட்டோம்னு.
அங்கே அக்கா ஒரு கடைல சாப்பாடு வாங்கி குடுத்துச்சு. அங்கேயே பல்லு விளக்கி சாப்டுட்டேன்.
அப்புறம் ஒரு வீட்டுக்கு கூட்டி போய் அக்கா சொல்லிச்சி " பாருடி நிஷா.. இங்க ஒழுங்கா இருந்தீனா பணம் நெறய குடுப்பாங்க.. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு ஊருக்கு வரும் போது உம்புருஷன் உன்ன நல்ல வெச்சுக்குவான், உம்புகுந்த வீட்டு மனுஷங்களும் உன்ன தாங்குவாங்க"
அந்த வீட்ல வெறும் பொம்பளைங்களா இருந்தாங்க. நான் நெனச்சேன் ஏதும் வேலைக்கு போறவங்க இங்க தங்கிகினு இருக்காங்கன்னு. அக்காவும் அப்படி தான் சொல்லி விட்டுட்டு போச்சு.
அக்கா கிளம்பும் போது, செரி.. நம்பளும் கிளம்பிறலாம் பேசாம ஊருக்கு போய் ரெண்டு உதை வாங்கினு இருந்தர்லாம்னு தோணிச்சு.. ஆனா அப்பறம் காசோட போகலாம், அப்போ தான் மரியாதை இருக்கும் அப்டின்னு இருந்துட்டேன்.
அக்கா போனதுக்கு அப்புறம், சாயங்காலமா ஒரு பொண்ணு வந்து அக்கா பூ வெச்சுக்கணு பூ குடுத்து போச்சு. சேரி.. இம்மா நல்லவங்க கிட்ட தான் அக்கா நம்மள சேர்த்து இருக்குனு நெனைச்சு சந்தோசப்பட்டேன். அப்புறம் ஒரு ஒம்பது மணிக்கு மேல அங்கே நெறய ஆம்பளைங்க வர ஆரம்பிச்சாங்க.
என்னை ஒரு ரூம்ல தள்ளிவிட்டுட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது இது ஒரு சாக்கடைன்னு. ஆரம்பத்துல மாட்டேன்னு சொல்லப்போய் ஒரே அடி, உதை. அப்படியும் விட்டாங்களா.. விடமாட்டாங்க. ஒரு ஊசி போட்டு மயக்கம் வரவெச்சு, தப்பிக்க ஒரு வழிகூட இல்லை.
தினம் உடம்பு எல்லாம் நோவும். வெறி நாய்க்கு இரையானது போல. என்ன செய்ய? ஒரு சின்ன குடும்ப கஷ்டத்துக்கு பயந்து ஓடி வந்து மாட்டிகிட்டேன்.
பகல் முழுக்க ஒரு இருட்டு ரூம்ல அடச்சு வெச்சு இருப்பாங்க.. சாயங்காலமா ஒரு ஊசி போட்டு ஒரு ரூம்புல கொண்டு போய் தள்ளிருவாங்க. சாவறதுக்கு ரெண்டு தபா முயற்சி பண்ணியதால கால் முழுக்க இரும்பா காய்ச்சு சூடு போட்டாங்க. அது வேற நடக்கவும் முடியாம போய்டிச்சு. சூடு போட இனி இடமே இல்லை.
இப்படியே மூணு வருஷம் ஓடி போச்சு.
ஒருத்தன் தினம் வருவான். அவன் தான் கேட்டான், " நீ பேசாம என் கூட வரியா.. நான் உன்னை ஊர்ல கொண்டுபோய் விடறேன்"ன்னான். சரி இந்த நரகத்துல இருந்து தப்பிச்சா போதும்ன்னு அவன் கூட கிளம்பிட்டேன்.
பாவம் அவனும் பணம் அதிகம் கொண்டு வரல. என்னை வெச்சு இந்த இடத்துல அதிகம் சம்பாதிக்க முடியலன்னு அந்த பெரிய அக்கா, "குடுக்கறத குடு" அப்படினு இவன் கிட்ட ஒரு ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிக்கிட்டு என்னை விட்டுட்டாங்க.
இவன் பேர் மாரி.  பாவம் அவனுக்கு கல்யாணமாகி சம்சாரம் அவன் கூட இல்லையாம். ரெண்டு குழந்தைங்கன்னு சொன்னான்.  அவன் சொல்ல சொல்ல எனுக்கு என்னோட குழந்தைங்க நெனைப்பு வந்துடுச்சு.
மாரி கேட்டான்,"எந்த ஊரு புள்ள நீ ?"
டபக்குனு சொல்லிட்டேன் "தஞ்சாவூர்.. அங்கே ஒரு தியேட்டர் முன்னாடி பஜ்ஜி போண்டா கடை எங்களது "
"சரி புள்ள.. நான் போய் பாத்துட்டு வந்து உன்னை அழைச்சுகிட்டு போறேன்"
ரெண்டு நாள் கழிச்சு வந்தான். "அப்படி யாரும் அங்க இப்போ இல்லை.. அப்புறம் டீ கடை பாஷா குடும்பம் எங்கேயோ வெளியூர் போய்ட்டாங்க.. யாரன்டையும் சொல்லிட்டு போகலையாம்.. பேசாம நீ என்கூடவே இருந்திரு புள்ள.. எம்பிள்ளைங்களுக்கு ஒரு தாயா"
யோசிக்கறதுக்கு முடியலை.. ஒன்னும் புரியல, எங்க போய் தேட எம்புள்ளைங்கள.. எம்புருஷனை..?
பேசாம இவன் கூட.. அதான் இந்த மாரி கூடவே இருந்துட்டேன்.  இப்போ ஆச்சு பத்து வருஷம். இந்த குழந்தைங்க இப்போ பள்ளிக்கூடம் போகுதுங்க. எம் புள்ளைங்க என்ன பண்ணுதோ, என்ன ஆச்சோ ?
இப்போவும் மனசுல தஞ்சாவூர் போய் தேடி பார்க்கணும்னு ஏக்கமா இருக்குது.. ஆனா எனக்கு அங்க போவ சரியான பஸ்சு கூட தெரியாது. இப்படி உங்கள மாதிரி யார் கிட்டவாச்சும் சொன்னா, எங்கயாவது எம்புள்ளைங்கள பார்த்தா சொல்லுவீங்க தானே ?
சரிங்க எனக்கு வேலைக்கு கிளம்பற நேரம் ஆச்சு. இப்போ போனாத்தான் நாலு வீடு வேலை செய்ஞ்சு முடிக்கமுடியும்.
மறக்காம எனக்காக கொஞ்சம் தேடுங்க.. தஞ்சாவூர் போனா... என்னையும் கூட்டிட்டு போங்க.. கெஞ்சிக் கேக்கறேன்..!
Posted by shammi's blog at 9:20 AM 1 comments
Labels: யூத்புல் விகடன்

Tuesday, October 25, 2011

முக்கோணம் ...




தேக்கிவைத்த 
நினைவுச்சுருள்கள்  கொஞ்சம் 
பிரிந்து அவிழ்ந்து போனதில் 
சிதறி விழுகிறார்கள் 
அவன் 
மற்றுமோர் அவள் ....

சிக்கல்கள் பிரிக்க
சிக்கிக்கொண்டனள் .
ஓர் இழை பிரிந்து 
இரு முனைகளில் 
அவன்
 மற்றும் 
 அவனின் அவள் ....

கோர்த்துக்கொண்டே வந்தவள்  மாலையின் 
அடியில் நிற்கிறது ஓர் கேள்விகுறி
அடியில் அமைதியாய் ஓர் 
முற்றுப்புள்ளியும் ....


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4898
Posted by shammi's blog at 2:02 AM 2 comments
Labels: உயிரோசை

Saturday, October 15, 2011

சிற்சில

சிற்சில சொல்லாடல்கள்  
பிரித்து அறியப்படாமலே 
 வாதங்கள் என 
மேல்போர்வை கொண்டு 
ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன ..

மீட்சி என்னும் சொல்லறியா அவை 
தனக்குள் முடங்கி
 "தான் " விடுத்து..
தர்க்கத்தில் 
கலந்து பிணைந்து  பின்னர் 
தானாய் கரைந்தும் விடுகின்றன 

அவைகளுள் சிலவோ 
நீரினடியில் வேர் பிடித்து 
தண்டின் வழி உண்டு 
எங்காவது  மலர 
சேற்றின் அடியில் இன்னும் 
சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன 
அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை ...

http://puthu.thinnai.com/?p=4895

Posted by shammi's blog at 8:55 AM 0 comments
Labels: திண்ணை

Sunday, October 2, 2011

கனவின் எதிரொலி....

இருளின் நீட்சிப்பாதையில்
மிச்சம் இருந்தது
இமைகளின் உறக்கம்...

தொடக்கங்களில் பிரியமாய் இருந்த
கனவுகள் தொடர்ச்சியில்
கொஞ்சம் மருட்டுகின்றன

ஒ... இந்த கனவுகள்...
மீட்சி அற்ற பள்ளத்தாக்கின்
இருள் நிறைந்த பாதையில்
என்னை கொண்டு நிறுத்துகின்றன...

யாரும் அற்ற வேளைகளில்
கேள்விகள் தோன்றின
வினவுகளின் தொடர்பில்
ஓர் உரு மெல்ல உதித்தது
மனித சாயலா? மிருக சாயலா?
புலப்படவில்லை....
கடைவாய்
வழிந்தோடும் ரத்த வாடையோடு
என்னை புசிக்க அருகில் வர

வீறிட்டு அலறி கொண்டிருந்தேன்
யாரும் அற்று...
அறையில் ஓர் செந்நிற விளக்கு
ஒளி பாய்ச்சிய படி இருந்தது....
Posted by shammi's blog at 5:50 AM 2 comments
Labels: வல்லினம்

Thursday, September 29, 2011

எங்கிலும் இருக்கும் அவன்




வழக்கொழிந்த வார்த்தைகளினூடே 
தர்க்கப்போர் துவக்குகிறான் அவன் 
சமயத்தில் அடர் ஆழம் வரை 
செங்குத்தாய் சென்று 
இருள்சூழ் பாதாளங்களிடையே 
தேங்கிக்கிடக்கின்றன அவ்வார்த்தைகள் 

செவ்வகச்சட்டம் கொண்டு
சதுரித்த முகப்புகள் கொண்டு 
சீந்துவாரற்றுத் தனித்துக் கிடக்கிறது  
சபிக்கப்பட்ட அக்கோப்பை 

பேராவல் மண்டிட கரத்தினில் எடுத்தவன் 
இதுகாறும் சேர்த்தெடுத்த இரத்தத்துளிகளை 
அவற்றில் ஊற்றுகிறான் 

அக்கோப்பைகள் நிரம்பியதும் 
எக்காளமிடுகின்றன சிவப்பாய்.
அவற்றின் கூச்சல்களும் சப்தங்களும்
எங்கோ தூர்ந்து போன ரவைகளின்
வடுக்களில் மிச்சமிருக்கும்
ரத்த நாளங்களின் வீச்சம் தாங்கியே இருந்தன

"சாத்தான் "..."ரத்தகாட்டேறி"...."பிசாசு "
எனப்பெயர்களிட்டு  அழைத்தாலும் ...
மனிதருள் மனிதராய் 
மறைந்தே இருக்கிறான் அவன் ...

"சமரசங்கள் " எனப்படும் 
சந்தர்ப்பவாதிகள் கூடம்
அவனுக்கே "ஆகுதி "..

எங்கோ தொலைவில் இருக்கும் தேவாலயத்தின் 
மணித்தியாலப் பிரார்த்தனை இனி 
" பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே ..
இப்பூலோகத்தில் இருக்கும் மனித உருக்கொண்ட ராட்சதனிடமிருந்து எம்மை காத்து இரட்சிப்பீர் "
என மட்டுமே இருக்கக்  கூடும் 

Posted by shammi's blog at 6:28 AM 1 comments
Labels: உயிரோசை

காட்சிகள்

இருட்டு குடைபிடித்த 
 வெளிச்சத்தை 
உமிழ்கிறது 
நிழல்.... 
வட்டவட்டமாக ..

அவளின் வியர்வை 
மழை நனைத்த 
கூந்தலில் சொட்டு கின்றது 
நட்சத்திர பூக்கள் 


பெய்த  மழையில் 
வெளிச்சத்தை சேகரித்து 
தெளித்து எழுந்தது 
வானவில் கோலங்கள்...

வர்ணம் உதிர்த்து 
பறந்தது அந்த 
பால் நிற பட்டாம்பூச்சி 
அங்கொன்று இங்கொன்றுமாய் 
பச்சையும் சிவப்பும் ...



http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4819

Posted by shammi's blog at 6:27 AM 0 comments
Labels: உயிரோசை

Tuesday, September 6, 2011

அவன் ...அவள் ..அது ..




அவன் 
ஏதோ ஓர் அடர்வண்ணம்
நிரப்பியே அவன் எழுதுகிறான்
பலசமயம் அவை புரிவதாயில்லை ..
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று
முரண்பட்டும்  ஒட்டிக்கொண்டும்
கையெழுத்து வேண்டாம் என
மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில்
பிரதி எடுக்கிறான் அப்போதும்
அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய்
அப்பிக்கொள்கின்றன
அவள் ..
எழுதிய வார்த்தைகளினூடே
கூறா மொழிகளையும்
சேர்த்தே படிக்கிறாள் ..
விழிகளின் மொழிகளை
இளவர்ணங்களில் தோய்த்தெடுத்து
அறைகளின் சுவர்களில் பூசி வைக்கிறாள்
ஒட்டிக்கொண்ட வார்த்தைகள்
அழகாய் தனித்து தெரிந்தன
அடர் நிறமாய் ...
அது ...
சிரித்துக் கொண்டிருந்தது
அது ...
இவனுக்கும்
அவளுக்கும் இடையே ...
சிக்கல்களின் துவக்கம் ...
தொடக்கங்கள் வாதித்து
பின்னூட்டங்கள்  கொடுக்கையில்
கசப்புகள் வெளிவரத்துவங்கின ....
வெளிறிப்போன நிறமிகளின்
அடர் வர்னமென ...
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4745

http://puthu.thinnai.com/?p=3923
Posted by shammi's blog at 12:30 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை

Friday, August 19, 2011

நீ யார்???




கண்ணாடி முன் நிற்கையில்
என்னை விழுங்குகிறாய் 
பிம்பமாய் விழுந்திடும்
உன்னை மறைக்கும்
நீ யார் ?
என்ன உன் பெயர் ?
ஏன் வருகிறாய் என்னுடனேயே?

விவாதிக்கையில்  என்றுமே 
எதிர் சாட்சியம் சொல்லும் நீ
சரியெனவும் தவறெனவும் 
சிக்கல்களுண்டாக்கி 
அவிழா முடிச்சுக்கள் கோர்த்து 
குற்றமாலை வாசிக்கிறாய்
சரி சரி இனி இப்படி இருக்காதே 
எனப் பிடி தளர்த்துகிறாய்
சிலந்திகள் கோர்த்துவிட்ட 
பின்னலாடையென இறுகி 
மூச்சறுந்து போகும் வேளையில் 


விட்டு விட்டு சுவாசம் தவிர்க்கிறாய் ..
மெல்ல மெல்ல சிக்க வைத்து 
விடுவித்து ஆவி விடுத்து மூச்சு பிரிகையில் 
மட்டுமேன் சட்டையாய் அவிழ்கிறாய்???
Posted by shammi's blog at 9:22 PM 4 comments
Labels: உயிரோசை

Sunday, August 14, 2011

எங்கோ தொலைந்த அவள் . ..


யன்னல்கள் ஏதுமற்றிருந்த 
அந்த ஒற்றையறையின் கதவுகள் 
சாத்தப்பட்டே இருந்தன 

எப்போதும் அலறல்களும் 
கூச்சல்களும் அங்கே 
கசிய விடப்பட்டிருக்கும் 

ஒலித்துகள்கள் ஒவ்வொரு 
அணுவிலும் ஏற்றப்பட்ட 
உடல் அதிரத்துவங்கும்

மௌனமான நேரங்களில் கூட 
செவிகளில் ரீங்காரமிடும்
அந்த அழுகையின் ஒலி
 
அவளிலிருந்து
அந்த அறைக்கு 
விடுதலை தந்தது 
ஒர் மரணம்

மீண்டும் பூட்டப்பட்ட
அந்த அறைக்குள் 
அவள் தனித்து
கூச்சல்களும் அலறல்களும் 
அழுகைகளும் 
மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில் ..
http://puthu.thinnai.com/?p=3239


Posted by shammi's blog at 10:05 PM 10 comments
Labels: திண்ணை

Tuesday, August 2, 2011

கனா தேசத்துக்காரி


கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள்
என்றுமே தனித்திருந்தாள்
அம் மாய உலகில் தனக்கெனவோர்
அரியாசனம் அமைத்தவள்
பிரஜைகளையும் உருவாக்கினாள்

அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர்
அதில் அனைவரும்
பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள்
அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள்
வெளிர் நிறங்கள் தாங்கிய
போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை


மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில்
வாரி இறைத்தபடியிருந்தன
தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன
ஒவ்வொரு நிறமும்
கோரமாய்  குணம் கொண்ட
வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில்
நனைந்த கோழிக் குஞ்சொன்றாய்
தப்பும் எண்ணம் ஏதுமற்றுப்
பலியானது மௌனமாய்...
கனாக் காண்பதேயில்லை இப்போதெல்லாம் அவள் ..

Posted by shammi's blog at 9:35 AM 3 comments
Labels: திண்ணை

அவன் ஆனவன்




பெயர்களேதுமற்றே 
உருவாகிறான்
இருளின் சுவடுகளில் 
அடையாளமின்றித் திரிந்து 
காற்றினூடு சஞ்சரிப்பவனுக்கு
இப்பொழுதும், எப்பொழுதும் 
கொடுக்கப்படவேயில்லை
பெயர்களேதும் 

அன்னியர்களையும் ஈர்ப்பதே செயலாகியவன்இருளின் சப்தம் நிரம்பிய
அறையின் கதவுகளிடையே 
முனகிக் கொண்டிருந்தான் 

பதிப்பிக்க முயன்று பின் 
கையெழுத்துப் பிரதியுடன் 
நின்று போனது
என்னில் அவனது வார்த்தைகள் 



தொடர்வதிலேயே தொடர்ந்து 
நின்று விடும்
எங்கள் இறுதிச் சந்திப்பு என்றும் 
வரையறுக்கப்படுவதே இல்லை 


அந்திம வேளைகளிலும்
வார்த்தைகளைத் துப்பி

கவிதை செய்தே 
என்னை துரத்துகிறான்  

வெற்றுக் கோப்பைகளை  நிறைக்கும் நீரினைப் போல 
நுரைத்துப்  புறப்பட்டு
வர்ணஜால வார்த்தைகளில் ஈர்த்து 
இறுதியில் அடங்குகிறான் 
பெயரேதுமற்றவன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4604
Posted by shammi's blog at 9:34 AM 3 comments
Labels: உயிரோசை

Thursday, July 28, 2011

வேற்றுகிரக வாசிகள்



அது  என்னையொத்தே இருந்தது
சலனங்களற்ற வெற்று வெளி
வெறித்தவாறே பார்வைகள்

தனித்த ஒன்று
இருப்பதாகவே தெரியவில்லை
இருந்தது அதன்  உயிர்ப்பு
என்னில் கலந்து உள்ளோடுவதாகவே
கை, கால் என உறுப்புகள் ஏதுமில்லை
ஆயினும்
ஒரே திசையில் பயணித்துக் கொண்ட எண்ணவோட்டங்கள்

ஈருயிர்களிலோர் பயணம்
அனைத்து உறுப்புக்களும் ஒத்திருந்தது பூகோள உருண்டையை
குருதிக்குப் பதில் ஒயர்கள் அதில்
ஏதோவோர் எலக்ட்ரோனிக் சாதனம் போல

என்றபோதிலும் இறந்துகொண்டிருந்த என்னிடம் நின்று
சில நொடிகள் மௌனிக்கக் கூடிய
மனிதம் மிச்சமிருந்தது ...

இவர்கள் வேற்றுகிரக வாசிகள் 

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4589
Posted by shammi's blog at 1:09 AM 0 comments
Labels: உயிரோசை

Saturday, July 16, 2011

கரியமிலப்பூக்கள்

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை 
கொண்டவையாகவே இருந்து விடுகின்றன
சில நிஜங்கள் 

மறுக்கப்படுகிறது
இனிப்பின் இயல்பு மறந்தும் கூட

இறுக்கப்பட்ட மன  இயந்திரத்தின்
அழுத்தக்  கோட்பாடுகள் 
வேகமேற்று ..

அனல்வாயின் கொதிக்கும் 
தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள்
மலர்ந்து விடுகின்றன 
நட்சதிரப்பூக்களாய் ...

சூடு தணிக்கும் பணியென 
தண்ணீர் ஊற்றப்படுகையில் 
குளிர்ந்தும் இறுகியும்
கிடந்தன
கரியமிலப்பூக்கள் 
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fputhu.thinnai.com%2F%3Fp%3D2415&h=KAQA0W6py


Posted by shammi's blog at 9:03 PM 1 comments
Labels: திண்ணை

Thursday, July 14, 2011

அவள் ....

கருநிற மேகமொன்று சற்று 
வெளிறிப் போயிருந்தது 
அவளது பார்வை
கலைந்து போனதில் நிலைத்து
மேகத்திரையில்
காற்றின் அலைகள் 
பிய்த்து போட்டன
கற்பனைகளை 
மீண்டும் 
ஒன்று கூடிற்று 
கலைந்து போனவை
பார்வையின் உஷ்ணம் 
தாங்காது 

கோர்த்து வைத்தவை 
காணாமல் போக 
கண்ணீர் வடித்தது வானம் ,
அவள் பார்வையில் பட்டபடி 

இடியாகவும் 
மின்னலாகவும்
உருமாற்றம் பெற்றன 
குரோதம் கொப்பளித்த கணங்கள் 
சலனங்கள் ஏதுமற்று 
மீண்டும் மீண்டும் வெறித்தபடி
பார்த்துக் கொண்டேயிருக்கின்றன 
அவளிரு விழிகள்

Posted by shammi's blog at 8:43 AM 0 comments
Labels: திண்ணை

Thursday, July 7, 2011

குயவனின் மண் பாண்டம்

சுற்றி வரும் சக்கரத்தின் 
மையப்புள்ளியில் வீற்றிருக்கிறேன் நான்
சற்றுப் பதமாகவும் கொஞ்சம் இருகலாகவும் 
எந்த உருவமுமற்றதோர் நிலையில் 
ஏகாந்தம் துணையாய்க் கொண்டு 

சற்றுப் பொறுத்து வந்த
ஓர் முழு  வட்ட சுழற்சியில்
மெல்ல நிலை பிறழா வண்ணம் 
எழுந்து ஓரமாய்ச் சாய்கிறேன்..
அருகிலேயே வளைந்து நெளிந்து 
சற்றே அகன்றபடி
சாய்மானமாக ...
வியாபித்தே இருக்கிறேன்
கொஞ்சம் பொறுத்தே அப்புறப்படுத்தப்பட்ட 
அப் பாண்டத்தின் எங்கோவோர் மூலையில் 
"நான்" கரைந்தோ...
இல்லை முற்றிலுமோ ...
 ....

முற்றிலுமாக
 அழித்து போவேனா 
நான் ?
இம் முறையாகிலும் உடைக்கப்படும்போது 
 
http://puthu.thinnai.com/?p=2112
 


Posted by shammi's blog at 9:08 PM 2 comments
Labels: திண்ணை

Saturday, June 25, 2011

வினா ....




இருளை உள்ளடக்கியே 
பரவிக்கொண்டிருக்கின்றன
வெளிச்சக் கீற்றுக்கள் 

எங்கும் துளை போட இயலாமல் 
காற்றுவெளியில் இறுகி 
கோளங்களாய் உருண்டு 
வீசப்படாத எரிபந்துகளாய் 
அந்தக் கோள்கள்...

வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ
திசை எங்கிலும் விரவிக்  கொண்டே 
தனித்தொரு பாதையமைத்து 
எதிலும் படாமல் விலகியே செல்லும் 

என்றும் விடை தெரிவதே இல்லை
சில கேள்விகளுக்கு  மட்டும்

Posted by shammi's blog at 8:55 PM 1 comments
Labels: திண்ணை

Friday, June 24, 2011

முதுகெலும்பா விவசாயம் ?



நல்லா செழித்து வளர்ந்துடுச்சு 
இந்தத் தலவாசல் வேப்ப மரம் ..
போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு 
இது தான் போக்கிடம் 
எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் ...
மோட்டுவளைய பாத்துகிட்டு 
எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ?
ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் 
வூடு தாவாரம் இறங்கிப்  போச்சு ..
இனி  ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ?


அந்த தாழ்வாரத்துல 
கொறஞ்சது எழுவது பேர்
உக்காந்து சாப்பிட்டது
கண்ணுக்குள்ள நெனப்பா வருது
இருவத்தஞ்சு படி அரிசி போட்டு மாவிடிச்சு 
திருமங்கலத்து அத்தை வீடு
புத்தூர் சித்தி வீடு 
இப்டி சொந்தக்காரவுக  வூட்டுக்கெல்லாம்  கொண்டு போயி
பத்துப் பன்னெண்டு நாள் இருந்து வாரது
எல்லாம் இப்போ இல்ல 

வீடு நெறஞ்சு மனசு நெறஞ்சதெல்லாம் 
இனி வரப்போறதில்ல 
பட்டணம் போயிப் புள்ளைங்க படிக்க ஆரம்பிச்சு 
வேலைக்கும் போய்ட்டாங்க ....
அவிங்களுக்கும் பாவம் பொழுது சரியாத்தான் போகுது 
வார போற நாளும் வேகமா ஓடுது 
இதுல சொந்தம், பந்தம்  என்ன தெரியப் போகுது ?
இப்போதைக்கு இந்த ஊர்ல மிஞ்சியிருக்கிறது 
கெழக்குவளவு சபாபதியும்,
மேக்காலவளவு  குப்புசாமியும் நானும் தான் 
எங்களுக்கப்றம் 
இந்த ஊர்ல விவசாயம்  என்ன ஆகும் ?

மண்ணாப் போன நடுவளவு தான் 
நெனப்புல வருது ஆமா

இந்தியாவோட  முதுகெலும்பு , கிராமம் 
விவசாயம்னு சொல்ற ராசாங்க,
இது என்ன கணக்கு அப்பு ? 
Posted by shammi's blog at 10:49 AM 2 comments
Labels: திண்ணை, யூத்புல் விகடன்

Saturday, June 11, 2011

நிழலின் படங்கள்

எங்கிருந்தோ கூவுகிறது
தனித்த அந்திமப்பறவை ஒன்று
அலறல்களடக்கி
மெல்லிய  அனத்தல்கள்
மட்டுமே கூவல்களாக
அதன் சப்தங்கள் நடுநிசியில்
உயிரில் பாய்ந்து ஊடுருவி
சிலிர்த்து எழும்பின ரோமகால்கள்

சொந்தங்களையிழந்த தாக்கம்
என்றோ தொட்டுச் சென்ற
மிச்சமிருக்கும் ரவையின் வடு ..
ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம்
ரத்தசகதியில் கிடந்த
அப்பாவின் சடலம்
கோரமாய் சிதைக்கப்பட்ட
தம்பியின் முகம்
அராஜகத்தின் எல்லைகளில்
தீவிரவாதம்
எல்லாம் ஒருங்கே தோன்ற

தொலைத்த சுவடுகளில்
பாதம் பதித்து  மீண்டும்
எழுந்தன மூடி வைத்த
நிழற்படங்கள்
Posted by shammi's blog at 9:13 PM 3 comments
Labels: திண்ணை

Tuesday, June 7, 2011

மௌனம்

மனதோடு மௌனம் 
பழக்கி பார்க்கிறேன் 
இருந்தும் முரண்டியது 
மரண கூச்சல் ....

சொடுக்கும் விரல் இடுக்கில் 
தப்பி தெறிக்கும் 
ஓசை , ..சொல்லாமல் 
மௌனம் கலைக்கும் 
அழைப்பிதழ்...

சுயம் அடிபடும் வேளைகளில் 
ரௌதரம் பழகவில்லை 
மௌனம் பழக்கி கொள்கிறேன் 
 வெளியிட விரும்பா வார்த்தைகளை 
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன் 

ஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது 
மௌனங்கள் மெல்ல 
இரை கொள்ளும் .....

எக்காளமிடும் பார்வைகள் ,
அனல் தெறிக்கும் வார்த்தைகள், 
 அனைத்து முயற்சிகளுக்கும் 
 மௌனமே உரையானது ...

 வார்த்தைகளை 
நீயே புசி..
அவற்றின் மரண கூச்சல்கள் 
துணை கொண்டு ....
நானோ  மௌன போர்வையில் 
குளிர் காய்கிறேன் ....
http://puthu.thinnai.com/?p=963
Posted by shammi's blog at 9:32 PM 0 comments
Labels: திண்ணை

அரங்கேற்றும் விந்தையின் கவிதை



அவைகள் கதிர்களாகவே
ஊடுருவுகின்றன
அனைத்தையும் தாண்டி

பிரபஞ்ச வெளிகளின் 
ஓர் பகுதி உள்ளில் செலுத்தப்படுகின்றன
மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்

ஊர்ந்து செல்லும் அம் மனச் சாய்கதிரை
ஓர் மையப் புள்ளியில் அமைதியாகிறது

பிரார்த்தனையின்  கடைசிப் பத்தியை
படித்து முடித்த பின்னெழும்
ஏகாந்த அமைதியை ஒத்தே
செயற்கையின் ஒளித் தடங்களில் ஓர் இயற்கை 
அரங்கேற்றும் விந்தையின் கவிதை ...

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4398
Posted by shammi's blog at 9:31 PM 1 comments
Labels: உயிரோசை

Wednesday, June 1, 2011

திரைமறைவு நாடகம்

எங்கேயோ திரை மறைவில்
நடக்கிறது நாடகம்
அறிந்தோ அறியாமலோ

ஒவ்வொரு பாத்திரப்படைப்பும்
ஒன்றை மிகைப்படுத்தியவாறு
எல்லாவற்றிலும் ஒரு நிழல் யுத்தம்

சாதகப்பறவை ஒன்று
மழைநீர் தேடியபடி
பறந்து திரிந்தது அல்லோகலப்பட்டது
நிழல் நீர் அருந்த பிடிக்காமல்
உயிர் விட்டது

மரப்பாச்சி பொம்மையோ
அடுத்த கொலுவிற்கு தயார் ஆகியது

எங்கோ ஓர் குயில் கூவத் துடித்தபடி ஊமையானது
பின்புலமாய் ஆந்தைகள் ஓலம்
ஆவேசமாய் அரங்கேறியது

பொய்மைகள் ஒன்றுக்கூட்டி
மெய்யிற்கு தளைப்பூட்டியது
இப்போதோ மெய்யும் பொய்யும்
இரண்டறக்கலந்து...
Posted by shammi's blog at 2:45 AM 0 comments
Labels: வல்லினம்
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ▼  2021 (1)
    • ▼  December (1)
      • மீள்தல் சுகம்
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio