வழக்கொழிந்த வார்த்தைகளினூடே
தர்க்கப்போர் துவக்குகிறான் அவன்
சமயத்தில் அடர் ஆழம் வரை
செங்குத்தாய் சென்று
இருள்சூழ் பாதாளங்களிடையே
தேங்கிக்கிடக்கின்றன அவ்வார்த்தைகள்
செவ்வகச்சட்டம் கொண்டு
சதுரித்த முகப்புகள் கொண்டு
சீந்துவாரற்றுத் தனித்துக் கிடக்கிறது சபிக்கப்பட்ட அக்கோப்பை
பேராவல் மண்டிட கரத்தினில் எடுத்தவன்
இதுகாறும் சேர்த்தெடுத்த இரத்தத்துளிகளை
அவற்றில் ஊற்றுகிறான்
அக்கோப்பைகள் நிரம்பியதும்
எக்காளமிடுகின்றன சிவப்பாய்.
அவற்றின் கூச்சல்களும் சப்தங்களும்
எங்கோ தூர்ந்து போன ரவைகளின்
வடுக்களில் மிச்சமிருக்கும்
ரத்த நாளங்களின் வீச்சம் தாங்கியே இருந்தன
"சாத்தான் "..."ரத்தகாட்டேறி"...."பிசாசு "
எனப்பெயர்களிட்டு அழைத்தாலும் ...
மனிதருள் மனிதராய்
மறைந்தே இருக்கிறான் அவன் ...
"சமரசங்கள் " எனப்படும்
சந்தர்ப்பவாதிகள் கூடம்
அவனுக்கே "ஆகுதி "..
எங்கோ தொலைவில் இருக்கும் தேவாலயத்தின்
மணித்தியாலப் பிரார்த்தனை இனி
" பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே ..
இப்பூலோகத்தில் இருக்கும் மனித உருக்கொண்ட ராட்சதனிடமிருந்து எம்மை காத்து இரட்சிப்பீர் "
என மட்டுமே இருக்கக் கூடும்
1 comments:
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
Post a Comment